திருப்பத்தூர் : தீபாவளி பண்டிகையொட்டி பிரசித்தி பெற்ற ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். இதற்காக,போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற லிங்க வடிவிலான முருகன் கோயில் அருகே ஏலகிரி மலையின் பின்புறப்பகுதியில் ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை மினி குற்றாலம் என்றும் அழைப்பார்கள்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. இதனால் பொதுமக்கள் களிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் ெவள்ளம் சற்று குறைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று தீபாவளி பண்டிகையொட்டி திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் உறவினர் வீட்டிற்கு மற்றும் சொந்த ஊருக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பிய பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் நேற்று ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் லிங்க வடிவிலான முருகனை தரிசிக்கவும் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
மேலும் நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்று பாதுகாப்பு கம்பிகளுக்கு நடுவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், பாறையில் மீது ஏறக்கூடாது காட்டுப் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் பொதுமக்களை காக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.