சீர்காழி/ மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகணி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் அன்பரசன்(23). பச்சை பெருமாள் நல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(23). நண்பர்களான இருவரும், நேற்றுமுன்தினம் காலை பைக்கில் சீர்காழியிலிருந்து திருமுல்லைவாசல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
பைக்கை ராஜேஷ் ஓட்டிச்சென்றார். அப்போது செம்மங்குடி அருகே சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராவிதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அன்பரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த ராஜேஷ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி சிறப்பு எஸ்ஐ பலி
மயிலாடுதுறை நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜ் (56). இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு செம்பனார்கோவில் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது விளநகர் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜ் படுகாயமடைந்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.