தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், இன்று முதல் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 20,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருவதால் இன்று முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒக்கேனக்கலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும், பரிசல் ஓட்டிகள் பரிசல்கள் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பரிசல்களை இயக்கும் பரிசல் ஓட்டிகள், பரிசல்களில் பயணிகளை ஏற்றி செல்லும் போது பாதுகாப்பு கவச உடை அணிவித்து பாதுகாப்பாக பரிசல்களை இயக்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.