கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரம், ஒரு அடி விட்டம் கொண்ட நான்கு கல் தூண்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இவற்றில் 2 ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும். இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: முதலாம் ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் இக்கல்வெட்டு, முரைசூர் நாட்டு தென்கரை குணநல்லூர் மஹாதேவருக்கு, திருவமுதுக்காக பராந்தகன் இரணமுகநான செம்பியன் மிலாடுடையான் என்பவன், இவ்வூராரிடம் பொன் கொடுத்து நிலம் வாங்கி தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிக பழமையான கல்வெட்டாகும் என்றார்.