பாபநாசம்: தஞ்சாவூர் அருகே கள்ளகாதலனை கத்தியால் குத்தி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா, கண்டியூரை சேர்ந்தவர் சத்தியசீலன் (எ) அருண் (31). இவரது மனைவி நந்தினி (24). இதே ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (29). இவரும், சத்தியசீலனும் நண்பர்கள். இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வந்தனர். சத்தியசீலன் வீட்டுக்கு வந்து சென்றதால் பிரகாசுக்கும் நந்தினிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு பிரகாஷ் நந்தினியை அழைத்துக்கொண்டு சுவாமிமலை அருகே அலவந்திபுரம் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நந்தினி, தனது கணவர் சத்தியசீலனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முகவரியை தெரிவித்துள்ளார். நள்ளிரவில் அங்கு சென்ற சத்தியசீலன் கதவை தட்டி உள்ளார். கதவை திறந்த பிரகாஷிடம், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக பேசும் போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நந்தினி, கள்ளக்காதலன் பிரகாஷின் இரண்டு கைகளையும் பின்புறமாக பிடித்துக்கொள்ள சத்தியசீலன் அவரது உடலில் 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் தம்பதியர் தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிந்து, தம்பதியை நேற்று கைது செய்தனர்.