மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்துள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவில் நீடிக்கிறது.
அணை முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 63,500 கனஅடியுமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.