பெரம்பூர்: வியாசர்பாடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் வேங்கையன் (24). இவர் மீது வியாசர்பாடி எம்.கே.பி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஒரு கொலை மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (25) என்ற நபர் வியாசர்பாடி மெட்ரோ வாட்டர் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது வேங்கையன் முழு குடிபோதையில் அங்கு வந்து, ரவிச்சந்திரனிடம் தகராறு செய்து அவரை வெட்டி உள்ளார். இந்த வழக்கில், எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேங்கையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, வேங்கையன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் வேங்கையனை குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்றுமுன்தினம் சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது சிறையில் இருக்கும் வேங்கையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.