கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கொள்ளனுர் ஏரியில் பத்தாம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் திலகா (37) கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மகள் உஷா (15) பெரியபாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 18ம் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு உஷா சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கொள்ளனுர் அருகே உள்ள ஏரியில் சடலம் ஒன்று இருப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் அது நெல்வாய் பகுதியை சேர்ந்த உஷா என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.