பாட்னா: பீகாரில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், கோயிலில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மைக்கை பிடித்த வாறு உயிரிழந்தார். பீகார் மாநிலம் சாப்ராவில் மாருதி மானஸ் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முதன்மைச் செயலாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் ரணஞ்சய் சிங் (80) இருந்து வந்தார்.
நேற்று மாலை அவர் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களை நோக்கி உற்சாகமாக மேடையில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
கையில் மைக்கைப் பிடித்தபடி, மேடையில் சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சொற்ெபாழிவு ஆற்றிக் கொண்டிருக்கும் போது ரணஞ்சய் சிங் மரணம் அடைந்ததால், சுற்றுவட்டார பகுதி மக்களும், கோயில் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.