×

மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி நிர்வாண பூஜை நடத்த முயன்ற மாமியார் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கொல்லம் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த லைஷா (60) என்பவரின் மகன் ஷாலு சத்தியபாபு (36) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை அவரது மாமியார் லைஷா, கொல்லம் அருகே நிலமேல் என்ற இடத்திலுள்ள மந்திரவாதியான அப்துல் ஜப்பார் (43) என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர் சில பூஜை செய்து இளம்பெண்ணை ஏர்வாடிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி அவரை கணவர் ஷாலு சத்தியபாபு, அவரது தங்கை சுருதி, மாமியார் லைஷா, மந்திரவாதி அப்துல் ஜப்பார், அவரது உதவியாளர் சித்திக் ஆகியோர் ஏர்வாடிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி நிர்வாண பூஜை நடத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுத்தார். இதுகுறித்து அந்த இளம்பெண் ஆற்றிங்கல் போலீசில் புகார் செய்தார். மேலும் விவாகரத்து கோரி  நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்தார்.ஆற்றிங்கல்  போலீசார் முறையாக விசாரணை நடத்தாததால் இது தொடர்பாக கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிந்து மாமியார் லைஷாவை கைது செய்தனர். மந்திரவாதி அப்துல் ஜப்பார், அவரது உதவியாளர் சித்திக், கணவர் ஷாலு சத்தியபாபு மற்றும் அவரது தங்கை சுருதி ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.

Tags : Nirvana Puja , Mother-in-law arrested for trying to conduct Nirvana Puja claiming daughter-in-law possessed by demon
× RELATED மின்சாரம் தாக்கி கர்ப்பிணி மனைவி சாவு...