×

மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நாகை: மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படை மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் படகிலேயே தங்கி இருந்து ஆழ் கடலில் மீன்பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் இந்திய கடற்படை வீரர்கள் ரோந்து சென்றனர். 10 மீனவர்கள் இருந்த மீன்பிடி படகு மீது இந்திய கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். அந்நேரம் நடுக்கடலில் மழை பெய்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் எச்சரிக்கையை கவனிக்காமல் மீனவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர், கப்பலில் இருந்தபடியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த படகின் அருகில் வந்து பார்த்த இந்திய கடற்படையினர், நிலைமையை உணர்ந்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து கடற்படை ஹெலி காப்டர் மூலம் காயமடைந்த மீனவர் வீரவேலை உடனடியாக மீட்டு உச்சிப்புளி கடற்படை விமான தளத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு மீண்டும் முதல் உதவி அளித்து, தயார் நிலையில் நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக  ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வீரவேல் கொண்டு செல்லப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீனவரை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Indian Navy ,Mayaladudurai , Mayiladuthurai fisherman, shooting incident, Indian Navy personnel, case registered under 4 sections
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!