பத்ரக்: ஒடிசா மாநிலத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ஒடிசா மாநிலம், பத்ரக்கில் இருந்து காரக்பூர் இடையே மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பகானாக ரயில் நிலையத்துக்கு அருகே வந்த போது கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து ரயிலை நிறுத்த ஓட்டுனருக்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயில் நிறுத்தப்பட்டது.
பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து தீ வேகமாக பரவி கொண்டிருந்த நிலையில் அதில் இருந்த பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் ரயிலில் இருந்து கீழே குதித்து ஓடினர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடைசி பெட்டியில் ஏற்பட்ட தீ, 2வது பெட்டி வரை பரவியது. உரிய நேரத்தில் செயல்பட்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகளை அசம்பாவிதத்தில் இருந்து பத்திரமாக மீட்க முடிந்தது’’ என்றனர்.