சென்னை: மின் கட்டணம் தொடர்பாக செல்போன்களுக்கு வரும் எஸ்எம்எஸ்களை யாரும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மின் நுகர்வோரை குறிவைத்து தற்போது நூதன மோசடி நடந்து வருகிறது. இந்த மோசடிகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து நடத்தப்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு ேமாசடி கும்பல்கள், மின்நுகர்வோருக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போனுக்கு மின்துறை அனுப்பியது போல எஸ்எம்எஸ்களை அனுப்பி மின்கட்டணம் கட்டச் சொல்லியும், அதற்கான ‘லிங்க்’கையும் என்று அனுப்புகின்றனர். இதை பயன்படுத்தும் பொதுமக்களின் பணம் மோசடியாக எடுக்கப்படுகிறது. இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தனது டிவிட்டரில்பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை:
பொதுமக்களாகிய உங்கள் செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்து இருந்தால் நீங்கள் உடனே புறக்கணித்துவிடுங்கள். இதுபோன்ற மோசடி நபர்களை பிடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் உடனே 100,112 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து செல்லுங்கள், இல்லையென்றால் காவல் உதவி செயலி மூலம் தகவல் மட்டும் உடனே கொடுங்கள். குற்றவாளிகளை நாங்கள் பிடித்துவிடுகிறோம். இவர்களை பிடிக்க நாங்கள் தனிப்படை அமைத்துள்ளோம். ஆனால், நீங்கள் ஏமாந்த பணம் இந்திய நாட்டில் இருந்தால் நாங்கள் உடனே பிடித்துவிடுவோம். ஆனால், பணம் உடனே வெளிநாடுகளுக்கு சென்றால் மீண்டும் இந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பது உறுதி கிடையாது. இதனால் தான் நாங்கள் பொதுமக்களுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இந்த மின் கட்டண மோசடியில் நீங்கள் மிகவும் கவனமாக, எச்சரிக்கையாக இருக்க காவல்துறை சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.