×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; 5 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு: 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் 5 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், குற்றங்களை தடுக்கவும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால், அவர்களது நலனை கருத்தில் கொண்டு, சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கீழ்க்காணும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் கவனங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 4 இடங்களிலும் 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்ற செயல்கள் நடவாமல் தடுத்து வருகின்றனர்.

தி.நகர் பகுதியில் 6 இடங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சிகளில் கண்காணிக்கும்போது, பழைய குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது. தி.நகர் பகுதியில் 17 போலீசார் தங்களது சீருடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் குற்ற செயல்கள் நடவாமல் கண்காணித்து வருகின்றனர்.

தி.நகர், பூக்கடை பகுதிகளில் தலா 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மையங்கள், வண்ணாரப்பேட்டை, எம்.சி. சாலையில் 4 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் புரசைவாக்கம் பகுதியில் 1 தற்காலிக கட்டுப்பாட்டு அறை என 11 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

மேலும் போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளையும், செல்போன், பணம், நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில், வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் 5 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.

பழைய குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்காக எப்ஆர்எஸ் என்ற செல்போன் செயலி மூலம் சுமார் 100 காவல் அதிகாரிகள் சுழற்சி முறையில், எப்ஆர்எஸ் காவல் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்சப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்ற செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தி.நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதிகளில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் கண்காணித்து வருகின்றனர்.

காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர சுற்று காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் 33 போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் சுற்று காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், சென்னை காவல்துறையின் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் 6 அகன்ற எல்இடி திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Diwali , 18,000 policemen provide security across Chennai ahead of Diwali festival; Monitoring by 5 drone cameras: Action if fireworks burst after 2 hours
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...