கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வாழைக்கொம்பு நாகூர் காமாட்சியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (60). திருமண புரோக்கர். இவரது வீட்டின் அருகே அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் தாத்தாவும், பழனிசாமியும் டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமியும், அவர்களது அருகில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் சிறுமியின் தாத்தா வெளியே சென்று விட்டார். அப்போது சிறுமியும், பழனிசாமியும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பழனிசாமி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆபாச வீடியோவை டிவியில் போட்டு சிறுமிக்கு காண்பித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியே சென்றார். இதுகுறித்து சிறுமி யாரிடம் சொல்வது என தெரியாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிறுமி, தனது ஆசிரியையிடம் ஆபாச வீடியோ குறித்து தெரிவித்துள்ளார். இதன்பேரில் ஆசிரியை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு ஆபாச வீடியோ போட்டு காண்பித்த திருமண புரோக்கர் பழனிசாமியை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.