திருமலை: தெலங்கானாவில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கல்லறை அமைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலானதால் பெரும் சரச்சை ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், முனுகோட் சட்டப்பேரவை தொகுதியில் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அடுத்தாண்டு இம்மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுவதால், ஆளும் டிஆர்எஸ், பாஜ மற்றும் காங்கிரஸ் இடையே இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பாஜ தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, முனுகோட் தொகுதியில் உள்ள மரிகுடாவில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சவுட்டுப்பலில் புளோரைடு ஆராய்ச்சி மையம், புளூரைடு பாதித்தவர்களுக்கு சிறப்பு உதவி வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இதனால், ஜே.பி.நாட்டாவுக்கு கல்லறை அமைத்து, அவருடைய புகைப்படம் அடங்கிய பேனரை சிலர் வைத்துள்ளனர். இதை தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமாராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கல்லரை வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.