சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளை அடித்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் தன்னுடையை நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன், அவனது கூட்டாளிகள் சந்தோஷ்குமார், பாலாஜி, சக்திவேல் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சந்ேதாஷ்குமார் உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ்குமாரின் மனைவி லுடியா ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்கள்.