×

பாஜ.வுடன் இப்போதும் நிதிஷ் குமார் தொடர்பு: பிரசாந்த் கிஷோர் தகவல்

புதுடெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜவுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும்  அந்த கட்சியுடன் அவர் மீண்டும் கூட்டு சேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜ கூட்டணியை முறித்து கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். நிதிஷின் இந்த  முடிவு, பீகார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நிதிஷின் ஐக்கிய ஜனதா தள முன்னாள் துணை தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரை கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நிதிஷ் நீக்கினார். பீகாரில் தற்போது பாதயாத்திரை செய்து வரும் பிரசாந்த், நேற்று கூறுகையில், ‘‘பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நிதிஷ்குமார் ஒன்றுபடுத்தி வருவதாக நீங்கள் நினைக்கலாம். அவர் மீண்டும் பாஜ பக்கம் சாய்வதற்கு முயற்சி செய்து வருகிறார். மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் மூலம் இதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். அவர் மீண்டும் பாஜ பக்கம் தாவினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,’’ என்றார். கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதா தளம் மறுத்துள்ளது.

Tags : Nitish Kumar ,BJP ,Prashant Kishore , Nitish Kumar still in touch with BJP: Prashant Kishore informs
× RELATED இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி