சென்னை; கொளத்தூர் பகுதியில் மூதாட்டியிடம் தங்கச்செயின் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, கம்பர் நகர், 5வது குறுக்கு தெரு, எண்.57, என்ற முகவரியில் வசித்து வரும் மூதாட்டி அம்சா, வ/81, க/பெ.பார்த்தசாரதி என்பவர் நேற்று (18.10.2022) மாலை சுமார் 6.00 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், மேற்படி மூதாட்டி அம்சாவிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார்.
இது குறித்து மூதாட்டி அம்சா V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது, V-6 கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டஅருண்பிரகாஷ், வ/36, த/பெ.உமேஷ்பாலன், எண்.30/9 பி, வடக்குமாடவீதி, கொளத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 6 சவரன் தங்கச்செயின் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண்பிரகாஷ் மீது ஏற்கனவே 1 கொலை வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட அருண்பிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.