சிதம்பரம்: தீட்சிதர்கள் சிறார் திருமண வழக்குகளில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தீட்சிதர்கள் சார்பில் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் சிறார் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. தீட்சிதர்கள் நிர்வாகத்தினர் குழந்தை திருமண சட்டத்தை ஊக்குவிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. கோயில் சட்டப்படி 25 வயது பூர்த்தியடைந்த திருமணமானவர்கள் மட்டுமே சந்திரமவுலீஸ்வர பூஜை செய்ய வேண்டும்.
ஆனால் கோயில் எதிர்ப்பாளர்கள் வேண்டுமென்றே குழந்தை திருமணம் செய்தால்தான் பூஜை உரிமை என்று பொய்யான பிரசாரம் செய்து வருகின்றனர். தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலம் சிறார் திருமணம் குறித்து தீட்சிதர் மீது குற்ற எண் 16 மற்றும் 17 குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்பு அந்த வழக்குகள் சிதம்பரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனை 2 வருடம் தான். 7 வருடம் குறைவாக உள்ள தண்டனை பெறும் வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் மாறாக நடைபெற்றுள்ளது என்று தீட்சிதர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த குழந்தைகளின் மனநிலை ஆயுட்காலம் வரை பாதிக்கும் தன்மையாகும். இத்தகைய மீறல்கள் செய்தால் உயர்நீதிமன்றம், குழந்தைகள் நல வாரியமும் தானாகவே வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறி குழந்தைகளை பரிசோதனை செய்வது குறித்து உச்சநீதிமன்றம், குழந்தைகள் நல வாரியமும் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.