×

செங்கம் அருகே பரிதாபம் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி-விழுப்புரத்தை சேர்ந்தவர்

செங்கம் : செங்கம் அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யாசின் மகன் ஆரிப்(27). இவர் தனது உறவினர்கள் அல்அமீன், பரிஷத், நவாஸ், அல்போன்சா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஜவ்வாது மலை அடிவார கிராமத்தில் உள்ள குட்டூர் நீர்வீழ்ச்சியை பார்க்க நேற்று மதியம் 12 மணியளவில் வந்தனர். பின்னர், அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளித்தனர்.

அப்போது, ஆரிப் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் குளிக்க சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அங்கிருந்த பாறையில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செங்கம் காவல் துறை, தீயணைப்பு துறை மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குட்டையில் மூழ்கி இறந்த ஆரிப் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நீர் வீழ்ச்சியில் குளிக்க வந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Paritapam ,Sengam ,Pali-Villupuram , Sengam: A teenager who went to bathe in a waterfall near Sengam tripped and fell down and drowned. Villupuram district,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி