×

ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலை 2 உ.பி தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலை தீவிரவாதிகளால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் ஹார்மென் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர், இன்று அதிகாலை கையெறி குண்டுகளை வீசியதில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் தீவிரவாதிகள் சிலர், ஹார்மென் பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ​​கையெறி குண்டுகளை வீசிய தீவிரவாதி இம்ரான் பஷீர் கனி என்பவனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தன.

Tags : Jammu and ,Kashmir , 2 UP workers shot dead in Jammu and Kashmir today
× RELATED ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில்...