பரேலி: உத்தரபிரதேசத்தில் இரண்டு சகோதரர்களை காதலித்த பெண், தற்போது அவர்களுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த 25 வயதுடைய பெண், அதேபகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களையும் காதலித்தார். இதையடுத்து மூவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பரேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ரம் சிங் கூறுகையில், ‘இரு சகோதரர்களுடன் மாயமான இளம்பெண், அவர்கள் இருவரையும் உயிருக்கும் மேலாக காதலித்துள்ளார். இதையறிந்த பெற்றோர் மூவரையும் கண்டித்துள்ளனர். ஆனால் மூவரின் காதல் நீடித்ததால், மூவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். முதற்கட்ட விசாரணையில், இரு சகோதரர்களும் தங்களது காதலியை அவர்களது தாய் மாமன் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வந்துள்ளது.
அங்கு சென்று பார்த்த போது மூவரும் இல்லை. இருந்தும் முதலில் தாய்மாமன் வீட்டிற்குதான் அவர்கள் வந்தது உறுதியானதால், தற்போது தாய் மாமன் மீது வழக்குபதிவு செய்துள்ளோம். காதலர்கள் மூன்று பேரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.