கோவை: கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் இரவு 1 மணிவரை செயல்பட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்ல எதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்கம், கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்று தீபாவளி பண்டிகை வரை இரவு 1 மணி வரை அனைத்து விதமான வியாபார தளங்களும் செயல்பட காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு இரவில் கடைவீதிகளுக்கு வந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், 18.10.2022-ம் தேதி கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கோவை மாநகராட்சியில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களுக்கும் இரவு 01.00 மணி வரை, செயல்படும், மேலும் பொதுமக்கள் வியாபார தளங்களுக்கு வருகைபுரிந்து இரவு 01.00 மணிவரை பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கு இயக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.