×

தறிகெட்டு ஓடிய சொகுசு கார் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது; அதிமுக பிரமுகர், தம்பி உட்பட 3 பேர் பலி: குன்றத்தூர் அருகே இன்று காலை பயங்கரம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய சொகுசு கார் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிமுக பிரமுகர்களும் தொழிலதிபர்களுமான அண்ணன், தம்பி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களுடன் சென்ற 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில்  காரில் தீ பற்றி எரிந்தபடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள்  படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் காருக்குள் உயிருக்கு போராடியவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய இருவரை  மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், 3 பேர் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர். 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கும்மிடிப்பூண்டி ஈகுவார்பாளையம் சேர்ந்த சகோதரர்களான ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும், தொழிலதிபர்களான இவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் தங்கள் பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டுள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் பழுதானதால்  அவற்றை சரிசெய்வதற்காக  பூந்தமல்லியில் இருந்து மெக்கானிக்கை அழைத்து சென்று  பழுதுபார்த்துள்ளனர். பின்னர், மெக்கானிக்கை பூந்தமல்லியில் இறக்கிவிடுவதற்காக ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு உட்பட 5 பேர் காரில் சென்றுள்ளனர். மலையம்பாக்கம் பகுதியில் கார் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

இவர்களுடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரியவந்ததுள்ளது. வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடந்த விபத்தில் அண்ணன், தம்பி உட்பட 3 பேர்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவம்  குன்றத்தூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tambhi ,Bhingaram ,Kunthatur , A runaway luxury car hits a roadside barrier and overturns in a ditch; AIADMK leader, 3 killed including brother: This morning's horror near Kunradhur
× RELATED ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல்,...