×

சென்னையில் இருந்து மாயமான 3 சிறுமிகள் பெங்களூருவில் மீட்பு

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை தேவாலயத்திற்கு  செல்வதாக வீட்டில் கூறிவிட்டு 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுமிகள் சென்றுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி  டி.பி.சத்திரம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, 3 சிறுமிகளின் நடமாட்டங்களை கண்காணித்தனர். இதில், ஒரு சிசிடிவி கேமராவில் 3 சிறுமிகளும் ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோ பதிவு  எண்ணை வைத்து,  டிரைவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் கடைசியாக 3 சிறுமிகளையும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, ரயில் நிலைய போலீசாரிடம் விசாரித்ததில், அந்த 3 சிறுமிகளும் நேற்று முன்தினம் இரவு  பெங்களூரூ செல்லும் கடைசி ரயிலில் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காணாமல் 3 சிறுமிகளின் படங்களையும் பெங்களூரூ ரயில்நிலைய போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரூ வந்த ரயிலில் இருந்து இறங்கிய 3 சிறுமிகளையும் ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு, ரயில் நிலையத்தில் பத்திரமாக தங்க வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து, டி.பி.சத்திரம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பெங்களூரூ விரைந்த போலீசார், 3 சிறுமிகளையும் பத்திரமாக அழைத்துக்கொண்டு, நேற்று மாலை சென்னை வந்தனர். பின்னர், அவர்களின் பெற்றோரை வரவழைத்து, அந்த சிறுமிகளுக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, வீட்டைவிட்டு  வெளியேறிய தங்கள் மகள்களை பத்திரமாக மீட்ட போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க  நன்றி தெரிவித்தனர்.

Tags : Chennai ,Bangalore , 3 missing girls from Chennai rescued in Bengaluru
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...