சென்னை: இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்கு பதிய முகாந்திராம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுவில், வழக்கத்தில் இல்லாத மனுநூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நடவடிக்கை இல்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளது என்றார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.