×

2 முறை முயன்று தப்பியவர் சிறப்பு எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பழையூர் மலையடிவாரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் அழுகிய நிலையில், தூக்கில் தொங்கியபடி ஆண் சடலம் நேற்று கிடந்தது. தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் தூக்கில் தொங்கியவர் தேனி மாவட்டம், மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ராமசாமி (55) என்பது தெரியவந்தது. ராமசாமிக்கு மகாலட்சுமி என்ற மனைவி, 16 வயதில் மகள், 13 வயதில் மகன் உள்ளனர். ராமசாமி மற்றும் அவரது மனைவி மூலமாக திருப்பூரை சேர்ந்த நாகேந்திரகுமார் என்பவர் வேலை வாங்கித்தருவதாக மயிலாடும்பாறையில் பலரிடம் பணம் வாங்கினார்.

ஆனால் வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள், ராமசாமிக்கும், அவரது மனைவிக்கும் நெருக்கடி கொடுத்தனர். மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராமசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்வதற்காக வீரபாண்டி ஆற்றில் குதித்தார். ஆனால் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினர். அதன்பிறகு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து தனது டைரியில், ‘நாகேந்திரகுமாரிடம் பணத்தை வாங்கி உரியவர்களிடம் கொடுத்து விடுங்கள். எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை’ என எழுதி வைத்துவிட்டு கடந்த 3ம் தேதி திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.


Tags : SI , A special SI who survived 2 attempts hanged himself
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது