×

இலங்கையில் இருந்து 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து நேற்று இரவில் படகில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வர முயன்ற இலங்கை தமிழர்கள் 6 பேரை படகோட்டிகள், தனுஷ்கோடி கடலில் முதலாம் மண ல்திட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர். இரவு முழுவதும் மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த அவர்களை பார்த்த தனுஷ்கோடி மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமேஸ்வரம் மரைன் போலீசார் இந்திய கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரினர்.

இதையடுத்து மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாமில் இருந்து இன்று அதிகாலை ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலில் சென்ற படையினர், முதல் மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த 3 பெண்கள் உட்பட 6 பேரையும் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து, மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அகதிகளாக வந்தவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாளை பகுதியை சேர்ந்த அண்ரனி டிலக்சன்(24) இவரது மனைவி சனுஜியா (20), தலைமன்னாரை சேர்ந்த சசிக்குமார்(47) இவரது மனைவி அந்தோணியாழ் பெர்னாண்டோ(42) , இவர்களது மகன் அன்டன் சனுஜன்(21) மற்றும் முத்தரிப்பு துறையைச் சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி(67) என்பது தெரிய வந்தது.

ஆறு பேரின் உடமைகளை சோதனை செய்த மரைன் போலீசார் மேல் விசாரணைக்காக அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முழுமையான விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Sri Lanka ,Dhushkodi , 6 people from Sri Lanka came to Dhanushkodi as refugees
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...