×

திருவள்ளூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து கட்டுமான வேலைக்காக விஜய், அஸ்பத், ரஹீம், ஆஷிக் மற்றும் ஒப்பந்ததாரர் சீனிவாசன், டிரைவர் மோகன் உள்பட 6 பேர், ஒரு வேனில் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருவள்ளூர் நோக்கி வந்தனர். அப்போது திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்சாலை பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் சத்திரம் அருகே வரும்போது  எதிரேவந்த பஸ் மீது மோதாமல் இருக்க வேனை சாலையில் இருந்து கீழே இறக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறிய வேன்  அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேனில் பயணித்த ஆஷிக் (20) என்பவர் படுகாயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜய், அஸ்பத் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தனர். மற்றவர்களுக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டவர்களை பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆஷிக் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சம்பந்தமாக மணவாளநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Tiruvallur , One killed as van overturns in ditch near Tiruvallur; 2 people were seriously injured
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...