புதுடெல்லி: அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தி மேம்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது,’ என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் நடந்த தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12வது சர்வதேச மாநாட்டில் ஒன்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் பேசியதாவது: அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு எடுத்து கொள்ள திட்டமிட்டுள்ளது.
25 ஆண்டுகள் வரையில் ஒன்றிய அரசு வசம் இருக்கும் இந்த சாலைகள், 4 அல்லது 6 வழி சாலையாக மாற்றப்படும். இதில் ஒன்றிய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். 13 ஆண்டுகளுக்குப் பின் செலவு, வட்டி உட்பட முழு முதலீடும் முழுமையாக திரும்ப கிடைத்துவிடும். அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் எந்த அபாயமும் இல்லை. அதில் நல்ல வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.