நாகர்கோவில்: இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நாகர்கோவிலை சேர்ந்த காசியின் கூட்டாளி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (27). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவி உள்பட ஏராளமான இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாச படமெடுத்து பலாத்காரம் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த 2020ல் காசி கைது செய்யப்பட்டார்.
இவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 வழக்குகள், வடசேரி காவல் நிலையத்தில் கந்துவட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. காசியின் லேப் டாப்பில் 450க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களும், 1900 ஆபாச புகைப்படங்களும் இருந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் காசியின் நண்பர்கள் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த ஜினோ, குமரி மாவட்டம் கனகப்பபுரத்தை சேர்ந்த கவுதம் (26) உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தடயங்களை மறைத்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுவரை 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காசியின் நண்பர் ஜினோ ஏற்கனவே ஜாமீனில் உள்ளார். காசி, இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தான் உள்ளார். ஆனால் இந்த வழக்கில் காசியின் நண்பர் கவுதம் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர்.
அவரை பிடிக்க அனைதது விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கவுதம், குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய தகவல், குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் திருவனந்தபுரம் சென்று, விமான நிலையத்தில் வைத்து கவுதமை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று மாலை நாகர்கோவில் கொண்டு வரப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.