தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை, கடந்த 1880ம் ஆண்டு ராமசாமி முதலியாரால் தொடங்கப்பட்டது. இவர்பெயரின் சுருக்கமாகவே ஆர்எஸ்ஆர்எம் என பெயர் பெற்றது. இங்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்து மகேப்பேறுக்கென ஏராளமானோர் வந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை தொடங்கி 142ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, நிறுவனரின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
அதவாது, கடந்த மாதம் 28ம்தேதி தண்டையார்பேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த சுகண்யா என்ற பெண்ணுக்கு இம்மருத்துவமனையில் 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உட்பட ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்தது. 10 மாதம் முழுமையடைவதற்கு முன்னரே இந்த குழந்தைகள் பிறந்ததா்ல் 3 குழந்தைகளும் எடை குறைவாக பிறந்தனர். ஆகவே, 3 குழந்தைகளையும், மருத்துவர்கள் மருத்துவமையில் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், 15நாட்களுக்கும் மேலாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையின் பலனாக குழந்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்தனர்.
அதனால் தாயோடு சேர்ந்து 3 சேய்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நல்லமுறையில் தன்னையும், தன் குழந்தைகளையும் கண்காணித்து சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கு நன்றி கூறுவதாக தாய் சுகண்யா தெரிவித்தார். மேலும், வீடு திரும்பும் தாய் சுகண்யாவிற்கு நினைவு பரிசினை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி மற்றும் நிறுவனர் ராமசாமி குடும்பத்தினர் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை நிலைய அதிகாரி ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.