×

நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெற முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வரக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  திராவிடவியல் கோட்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ தொடரின் முதல் பாகம் நேற்று காலை ஒளிபரப்பானது. கேள்வி-பதில்கள் வருமாறு:

திமுகவின் தலைவராக 2வது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வருங்காலத்தில் கட்சியை வழிநடத்த என்ன புதிய திட்டங்கள் உள்ளது?
அண்ணா வழியில் அயராது உழைப்போம். கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம், என்பதன் அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போது என்னுடைய பாதை. கொள்கையும் கோட்பாடும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கழகத் தொண்டர்களுக்குள், உடன்பிறப்பு என்ற உணர்வும் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் வழிகாட்டியாக திமுக இருக்க வேண்டும்.

இனித் தமிழ்நாட்டை திமுகதான் ஆளும் என்கிற நிலை நீடிக்க வேண்டும். என்னில் இருந்து தொடங்கி கடைக்கோடி தொண்டன்வரை இந்த லட்சியத்துக்காக உழைக்க வேண்டும்.நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்தை நிறைவேற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான திமுகவின் பங்களிப்பு என்ன? தமிழகம், புதுவை மாநிலங்களில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியில் கூட்டாட்சிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும். இதற்கான அரசியல் நடவடிக்கைளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்.

*கோபாலபுரம் முதல் கோட்டை வரையிலான அரை நூற்றாண்டுகால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?


என்னுடைய பொதுவாழ்வுக்கு அங்கீகாரம் என்பது, தலைவர் கலைஞர் சொன்ன, “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்பதுதான். என்னைப் பொறுத்தவரையில், அந்த உழைப்பால் மக்களுக்கு விளையும் நன்மைகள் என்ன என்பதில்தான் என்னுடைய பொதுவாழ்க்கை அடங்கி இருக்கிறது. கழகப் பொறுப்புகளைப் பொறுத்தவரையில், கோபாலபுரத்தில் 13 வயது சிறுவனாக, கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஆரம்பித்த நான், பல்வேறு பொறுப்புகளைக் கடந்த 50 ஆண்டுகளில் சுமந்து, திறம்படப் பணியாற்றிய காரணத்தால்தான் இன்று கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு இரண்டாவது முறையாகக் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

அதேபோல் மக்கள் பணியைப் பொறுத்தவரை, மேயராக நான் ஆற்றிய பணிகளுக்குத் தலைநகர் சென்னையின் வளர்ச்சியே சாட்சியாக இருக்கிறது. இப்போது முதலமைச்சராகச் சொல்ல வேண்டும் என்றால், காலை உணவுத் திட்டம், மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, நான் முதல்வன் போன்றவை எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய திட்டங்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் அவதூறுகளை என் மனதுக்குள் அனுமதிப்பது கிடையாது.
என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்குப் பணியாற்றுவதே என் வாழ்வின் கடமையாகக் கருதுகிறேன்.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கொச்சையாக விமர்சனம் செய்பவர்களை எளிதாகக் கடந்து போவது உங்களால் எப்படி முடிகிறது?
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறேன். 24 மணிநேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை எடுத்திருக்கிறீர்கள். அதேசமயம் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் ரகசியம் என்ன என்பதை இளைய தலைமுறைக்குத் தெரிவிப்பீர்களா? எல்லோரும் இதனை ஆச்சர்யமாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முன்பு கட்சிப் பணி மட்டும் இருந்தது இப்போது நிர்வாகப் பணியும் சேர்ந்திருக்கிறது. அதனால் வேலைகள் அதிகமாகி இருக்கின்றன. அதனை மிகச் சரியாகப் பிரித்து நேரம் ஒதுக்கி செயல்படுகிறேன். காலையில் உடற்பயிற்சி, மாலையில் நடைபயிற்சி, சரியான - அளவான உணவு என எனது உடல் நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பேன். வேலைகள் அதிகமாக இருந்தாலே உடல் சோர்வு வராது. இதில் ரகசியம் எதுவும் இல்லை.

நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். ஒன்றிய பாஜ அரசு கவர்னரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதை எதிர்கொண்டுதானே ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம். நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது. அதைப் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்னை இல்லை. தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடமிருக்காது. என்னைப் பொறுத்தவரையில் நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டு இருந்துவிடக் கூடாது. எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பதுதான் என்னுடைய பாணி.

தமிழ்நாடு முழுவதும் சாலைகள் எப்போது சரி செய்யப்படும். மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக எப்போது முடியும்?
பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியில எதுவும் செய்யப்படவில்லை. அதனால்தான் இந்த நிலைமை. நமது அரசு அமைந்ததும், கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்டதும், இயற்கைப் பேரிடரால் இனி சென்னை மக்கள் எந்தக் காலத்திலுமே துயரப்படாத வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு, பழுதான சாலைகளும், சீரழிந்த வடிநீர் கால்வாய்களுமாகச் சிதைந்து கிடந்த சென்னையை முழுமையாக மீளுருவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

அந்தப் பெரும் பணிதான் தற்போது நடைபெற்று வருகிறது. நகரின் அனைத்துப் பகுதியிலும் இந்தப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை நான் நன்றாகவே அறிவேன். ஆனாலும், இந்தச் சிரமங்களை சிறிது காலம் சென்னை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம், இனி சென்னையில் எப்போதுமே கனமழை காரணமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படாத வகையில் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் ரூ. 4,560 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நானே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன். மழைக்கு முன்னால் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா, முடியாதா?
முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள். நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பாஜ வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக இருக்கும். திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திமுக தவறிவிட்டதாக நீங்கள் நினைக்கிறீங்களா? இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்துகிற திராவிட பயிற்சிப் பாசறைக் கூட்டங்களையும், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா நடத்திய திராவிட மாதம் கூட்டங்களையும் நீங்கள் கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இளைஞரணி சார்பாக, கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி, கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும், உணர்ச்சியோடு நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய பாசறைக் கூட்டங்கள் 187 தொகுதிகளில் இதுவரை நடந்திருக்கிறது. ஏன், எதற்கு, எப்படி எனப் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்கும் இளைஞர்களின் ஆர்வமே திராவிட இயக்கத்தின் கொள்கைகள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. தனது அடிப்படைக் கொள்கைகளை விதைக்க திமுக என்றைக்கும் தவறியது இல்லை. பாஜவுடன் திமுக. சமரசமாகப் போய்விட்டதாகச் சிலர் சொல்கிறார்களே? இப்படிச் சொல்லுவதை பாஜகவே ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு பல கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிளித்தார்.


Tags : CM. K. Stalin , You can definitely get exemption from NEET: Chief Minister M.K.Stalin assured
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...