சில்ஹெட்: 8வது ஆசிய கோப்பை மகளிர் டி.20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில், இந்திய அணி இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 7வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நேற்று வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பேட்டி: எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் தான் வெற்றிக்கு காரணம். எங்கள் ஃபீல்டிங் யூனிட் முதல் பந்தில் இருந்து நன்றாக இருந்தது. நாங்கள் எளிதாக ரன்களை விட்டுவிடக் கூடாது என்று விவாதித்தோம். அதற்கேற்ப பீல்டர்களை சரியான இடங்களில் நிறுத்தினோம். நாங்கள் ஸ்கோர்போர்டைப் பார்க்கவில்லை. ஆனால் 5 ஓவரில் இலக்கை எட்ட தீர்மானித்தோம். போர்டில் உள்ள ஸ்கோர் பற்றி நாங்கள் ஒரு போதும் யோசிக்கவில்லை, அதன்படி பேட்டிங் செய்தோம், என்றார்.
தொடர் நாயகி விருது பெற்ற தீப்திஷர்மா கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முதல் ஆட்டத்தில் இருந்து இறுதி வரை ஒரு யூனிட்டாக நாங்கள் செயல்பட்டோம். அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் கோப்பையை வெல்ல முடிந்தது. நான் எனது பலத்தை மீட்டெடுத்து, பந்துவீசும் பகுதிகளில் கவனம் செலுத்துகிறேன். அது இந்த போட்டியில் எனக்கு உதவியது. இதே பார்மில் இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை, என்றார்.