பெரம்பூர்: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், கொளத்தூர் தொகுதியில் ரூ.7.76 கோடியில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் விடுதியை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தனர். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில். ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டும் பணி நடந்து வருகிறது. 25066 சதுர அடியில் ரூ.7.76 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த மாணவர் விடுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கும் வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில், பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், மாணவர் விடுதியை நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பணிகள் எவ்வாறு நடந்து வருகின்றன என்பது குறித்தும், மீதி எவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோவன், கொளத்தூர் பகுதி திமுக செயலாளர்கள் நாகராஜ், ஐசிஎப் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.