காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த தனசீலன், மணியன், சதீஸ், மாதேஷ், ஐயப்பன், மணிபாலன் அபிலாஷ் ஆகிய மீனவர்கள் கடந்த 13ம் தேதி கடலுக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 20க்கும் மேற்பட்டோர், படகை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரும்பு பைப்பால் தாக்கியதில் மீனவர்கள் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் மீன்கள், திசை காட்டும் கருவி, செல்போன்கள், வலைகள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று அதிகாலை கரை திரும்பிய 7 மீனவர்களும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.