தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல், ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் நெல்லின் ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஐதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கான்,
சென்னை உணவு தர கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ் ஆகியோர் தலைமையிலான 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று காலை தஞ்சை வந்தனர். வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த குழுவினர், அங்கு கொள்முதலுக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லினை ஆய்வு செய்தனர். இதுபற்றி விவசாயிகளிடம் கேட்டறிந்த குழு நெல்மணிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றது.