ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சியில் ₹17.20 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கியமான இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹17.20 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சமூக சேவகர் சுந்தரம் என்பவர் ₹6 லட்சம் நன்கொடையாக வழங்கியதையடுத்து அரசு மூலம் மீதமுள்ள தொகை இதற்கான நிதியாக ஒதுக்கப்பட்டு ஆஞ்சநேயர் கோயில், பார்சம்பேட்டை, குடியானக்குப்பம் உட்பட 4 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், குடியானக்குப்பம் 6வது வார்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். மேலும், நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூர்யகுமார், நகர செயலாளர் ம.அன்பழகன், ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், சி.கவிதா தண்டபாணி, க.உமா கன்ரங்கம், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், ஆணையாளர் பழனி, துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன், பொறியாளர் கோபு, வார்டு கவுன்சிலர் ஜி.ஆர்.சி.சக்கரவர்த்தி, ஓவர்சீயர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.