தண்டையார்பேட்டை: உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள பொது அஞ்சல்துறை அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, நிதி வலுவூட்டல் குறித்து அப்பகுதி பள்ளிகளில் சேமிப்பு முகாம் நடத்தப்பட்டது. ஊழியர்கள் மற்றும் முகவர்களிடையே போஸ்டல் திட்டங்கள் குறித்து வினாடி-வினா போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை ஜிபிஓ அலுவலக முதன்மை அதிகாரி பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். இதன் ஒரு பகுதியாக சென்னை ஜிபிஓ அலுவலகத்தில் இயங்கி வரும் பல்வேறு பிரிவுகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவர்களிடம் தபால்துறை சார்ந்த சேவைகள், திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அதேபோல், அஞ்சல் சேவைகள் குறித்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தபால்காரர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் 100 சதவீதம் கடிதங்கள் விநியோகம் செய்ய வேண்டும். மொபைல் செயலியை தபால்காரர்கள் திறம்பட பயன்படுத்த வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று முன்தினம் ஆதார் விழிப்புணர்வு முகாம்கள், சாமானியர்களுக்கான தபால் அலுவலக சேமிப்பு மேளாக்கள் நடைபெற்றது. மேலும், தபால்நிலைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும்படி முதன்மை அதிகாரி பாக்கியலட்சுமி தெரிவித்தார்.