×

பருவ மழை முன்னெச்சரிக்கை பெரம்பூர், ஆர்.கே.நகரில் கலந்தாய்வு கூட்டம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், பெரம்பூர், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதில், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், மின்சார கேபிள்கள் பாதிக்காத வகையில் கால்வாய் பணி செய்ய வேண்டும், தாழ்வான பகுதியில் உள்ள மின்சார பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும், பழுதான சாலைகளை முடிந்தளவு சரி செய்யவேண்டும், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கண்டறிந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகாதவாறு நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடித்து மழைநீர் செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். அப்போது, எந்தெந்த பகுதிகளில் பணி முடிக்கப்படாமல் உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி மண்டல குழு தலைவர், அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதில், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambur ,RK Nagar , Monsoon warning consultation meeting at Perambur, RK Nagar
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...