×

நடிகை கர்ப்பிணி திவ்யாவை தாக்கிய விவகாரம் பூந்தமல்லி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அர்னவ் அதிரடி கைது: வக்கீல் மூலம் விடுத்த விளக்கம் நிராகரிப்பு

சென்னை: நடிகை திவ்யாவை திருமணம் செய்து கர்ப்பமாக்கி, அவரை தாக்கிய விவகாரத்தில், நடிகர் அர்னவை பூந்தமல்லி நேமம் படிப்பிடிப்பு தளத்தில் வைத்து போரூர் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக, கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை என வக்கீல் மூலம் அவர் கூறிய காரணத்தை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா (35), விவாகரத்து ஆனவர். இவருக்கு 6 வயதில் மகள் உள்ளார். இதற்கிடையே சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக திவ்யா நடித்தார். அதே தொடரில் கதாநாயகனாக நடித்த அர்னவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பிறகு ஒரே வீட்டில் வசித்து வந்தபோது, நடிகை திவ்யாவுக்கு, ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகள் இருப்பது குறித்த தகவல் நடிகர் அர்னவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே அர்னவுக்கு சீரியல் நடிகை அன்சிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த திவ்யா தனது கணவர் அர்னவிடம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் 3 மாதம் கர்ப்பிணியாக உள்ள திவ்யாவை கீழே தள்ளி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு நடிகை திவ்யா பேஸ்புக் வாயிலாக போலீசாருக்கு புகார் அளித்தார். இதற்கிடையே நடிகர் அர்னவ் தனது மனைவியின் புகாரை மறுத்து கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் அளித்தார்.இரு தரப்பு புகாரை தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி போரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நடிகர் அர்னவ் தனது காதல் மனைவியை அடித்து துண்புறுத்தி தனது காதலியுடன் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போரூர் மகளிர் போலீசார் நடிகர் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை திவ்யா தனது கணவர் மற்றொரு நடிகையுடன் ஒன்றாக இருப்பது குறித்து புகைப்படம், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளுடன் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி மகளிர் ஆணையம் 2 நாட்கள் நடிகை திவ்யாவிடம் விசாரணை நடத்தியது. மேலும், நடிகர் அர்னவிடம் விசாரணை நடத்த அவருக்கு மகளிர் ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், போரூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று நேரில் ஆஜராக நடிகர் அர்னவுக்கு சம்மன் அனுப்பினர். இதனால் தான் கைது செய்யப்படுவோம் என பயந்த நடிகர் அர்னவ், முன்ஜாமீன் பெறும் நோக்கில் தற்போது ஆந்திராவில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது. அதே நேரம், போலீஸ் சம்மன் அனுப்பியும் நடிகர் அர்னவ் நேற்று நேரில் ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் மூலம் சின்னத்திரை படப்பிடிப்பின் போது, கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்று வருவதால் நேரில் ஆஜராக அவகாசம் அளிக்கும்படியும் கோரியிருந்தார். ஆனால் இந்த விளக்கத்தை போரூர் அனைத்து மகளிர் போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர்.

நடிகை திவ்யா அளித்த புகாரின்படி 2 முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி மறுத்து வருகிறார். எனவே, நடிகர் அர்னவை கைது செய்து விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது செல்போன் சிக்னலை வைத்து பூந்தமல்லி நேமம் அடுத்த கூத்தபாக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் நடிகர் அர்னவை அதிரடியாக நேற்று கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Arnav ,Poontamalli ,Divya , Actor Arnav Arrested at Poontamalli shooting site for assaulting pregnant actress Divya: Explanation given by lawyer rejected
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...