புதுடெல்லி: டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கலால் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை அடிக்கடி நடத்தி வருகிறது.
இந்தநிலையில் தலைநகரில் 25 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. இந்த சோதனையானது தனியார் மதுபான விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.