ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், தங்க்பாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த 10ம் தேதி பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள ‘ஜூம்’ என்ற மோப்ப நாய் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டது. அப்போது, தீவிரவாதிகள் சுட்டதில் ஜூம் மீது 2 குண்டுகள்பாய்ந்தன. ரத்தம் கொட்டிய நிலையிலும், மீண்டும் மற்றொரு தீவிரவாதி பதுங்கியிருந்த இடத்தை கண்டறிந்த ஜூம், அந்த தீவிரவாதியை கடித்து குதறியது.
ஜூம் உதவியுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரையும் வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஆனால், பலத்த காயமடைந்த ஜூம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தது. அதற்கு ஸ்ரீநகரில் உள்ள பதாமி பாக் கன்டோன்மென்ட்டில் ராணுவ வீரர்கள் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சினார் போர் நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.