×

பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு நாளை 107ம் ஆண்டு தினம்-கூடுதல் ரயில் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு நாளை 107ம் ஆண்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்த வழித்தடத்தில், கூடுதல் ரயில் இயக்கத்துக்கு பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மட்டுமின்றி இளநீர், மஞ்சி, கொப்பரை தேங்காய், காய்கறி உள்ளிட்ட விவசாய பொருட்கள் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகையை சிறப்பு மிக்க பொள்ளாச்சிக்கு ரயில் சேவையானது 1915ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் முதன் முதலாவதாக துவங்கப்பட்டது.

  அப்போது மீட்டர்கேஜ் பாதையாக இரும்பு பாதை ஏற்படுத்தப்பட்டது. முதலில் கோவை போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை ரயில் சேவை இருந்தது. அதன்பின் 1928ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், அதன்பிறகு 1932ம் ஆண்டு பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டிற்கும் ரயில் சேவை அடுத்தடுத்து துவங்கப்பட்டது.
 பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, கோவை, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ரயில் சேவை இருந்தது.

இதனால், பொள்ளாச்சியிலிருந்து பிற பகுதிக்கு ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மேலும், இங்கிருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டிருந்தது. அப்போது, ரயில் இணைப்பு பெட்டிகளை பழுது பார்ப்பதற்கான பணிமனையும், ரயில் பெட்டிகளை தூக்கி நிறுத்துவதற்கான, ராட்சத கிரேன் சுமார் 80 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்துள்ளது.

 இந்நிலையில், திண்டுக்கல்-போத்தனூர் அகல ரயில்பாதை திட்டத்துக்காக, மீட்டர்கேஜ் இருப்பு பாதையை மாற்றி, அகல ரயில்பாதை பணிக்காக 2008ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியுடன் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன்பின், 2009ம் ஆண்டு முதல் திண்டுக்கல்-போத்தனூர் வரையிலான அகல ரயில் பாதைக்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. 8 ஆண்டுகளில் முழுமையாக நிறைவு பெற்று, பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு மற்றும் கோவை, மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்சேவை தற்போது தொடர்ந்துள்ளது.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் உருவாகி  நாளை 15ம் தேதியுடன் 107 ஆண்டுகளாகிறது. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வழியாக தற்போது, கோவை மற்றும் பாலக்காடு, சென்னை, பழனி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை உள்ளது. ஆனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரயிலின் எண்ணிக்கை இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது.

  மீட்டர்கேஜ் இருப்பு பாதை இருந்தபோது, அந்த வழித்தடத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு ரயில் சேவை இருந்துள்ளது. எனவே, மீட்டர் கேஜ் இருப்புபாதையிருக்கும் போது இயக்கப்பட்ட ரயில் சேவை மட்டுமின்றி, கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக சென்னை, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை துவங்க வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pollachi Railway Station , Pollachi: The 107th anniversary of Pollachi Railway Station is being observed tomorrow. In turn, on this route, an additional train
× RELATED பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு நாளை ‘107வது ஹேப்பி பர்த்டே’