சென்னை: கொரானா அச்சுறுத்தல் காரணமாக 2019-20ம் ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் கோவாவுக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து 2020-21, 2021-22 ஐஎஸ்எல் தொடர்களும் ரசிகர்களின்றி மூடிய அரங்குகளில் கோவாவில் மட்டும் நடந்தன. கொரோனா பரவலும், தாக்கமும் குறைந்து வரும் நிலையில் இந்த 2022-23ம் ஆண்டுக்கான 9வது ஐஎஸ்எல் தொடர் அக்.7ம் தேதி கொச்சியில் தொடங்கியது. கூடவே அந்தந்த அணிகளுக்கு உரிய நகரங்களிலும் ஐஎஸ்எல் ஆட்டங்களும் நடக்கின்றன. ரசிகர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனடிப்படையில் சென்னையின் எப்சி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சொந்த ஊரில் நடக்கும் ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதில் பெங்களூர் எப்சி அணியுடன் மோதுகிறது. முன்னாள் சாம்பியன்களான இந்த 2 அணிகளும் ஏற்கனவே தங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியுள்ளன. பெங்களூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வடகிழக்கு ஒன்றிய அணியையும், சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏடிகே மோகன் பகான் அணிையும் வீழ்த்தியுள்ளன. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் பயிற்சியாளர் தாமஸ் பிரட்ரிக், கேப்டன் அனிரூத் தபா, ‘முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கி உள்ளோம். அதை தொடருவோம்’ என்றனர்.