சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்று ஒன்றிய அமைச்சர்ஜேந்திரசிங் செகாவத் கூறினார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமை வகித்தார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில், ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் பேசியதாவது: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில், 69.50 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 55.63 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 53.96 சதவீதத்தை விட அதிகம். தேசிய சராசரியை விட அதிகப்படியான இணைப்புகளை கொடுத்துள்ளதால் தமிழக அரசிற்கு கடந்த 2ம்தேதி விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டிற்கான இலக்கு 12.10 லட்சம் ஆகும். இலக்கை விட அதிகமாக 16.25 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு 134 சதவீத சாதனை அடைந்துள்ளது. எனவே, இலக்கை விட கூடுதலாகவே இணைப்புகள் வழங்க வாய்ப்புள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.