×

கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பறவைகள் அதிக அளவில் வர துவங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். இந்த சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு.

கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.

இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது. இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த “ஹிமாலய கிரிபன் கழுகு” மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது. தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால், இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கி.மீ தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது.

இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் ஆமூர் பால்கன் இனம், சைப்பிரியாவை கடந்து நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகை தரும். இங்கு ஓய்வு எடுக்கும் இந்த பறவைகள் மத்திய இந்திய பகுதி வரை வந்து பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள், தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் ஒரு லட்சம் பறவைகள் மேல் வந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தொடக்கத்திலேயே இதுவரை ஒரு லட்சத்திற்கு மேல் பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ளன. புதுப்புது வகையான வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வருகை தந்து கூட்டம் கூட்டம் இரை தேடும் அழகு கண்கொள்ள காட்சியாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து கோடிக்கரை வனசரக்கர் அயூப்கான் கூறுகையில், கோடியக்கரை பறவைகள் சரணலாயத்திற்கு சுற்றுலா பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் பறவைகளை கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனகுவார், தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Kodiyakar Sanctuary , Kodiakkarai Sanctuary, exotic birds,
× RELATED நாகை மாவட்டம் கோடியக்கரை...