சென்னை: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீடித்த கடற்கரை மேலாண்மைகான தேசிய மையத்திற்கு, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறை மூலம் வழங்கப்பட்டது. இத்திட்டம் தயாரிக்கும் பணி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு 2019 வழிமுறைகள் படி, தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்து அரசு துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொதுமக்களின் அலோசனைகள் அறிய கடந்த 7ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் www.environment.tn.gov.in, www.tnenvis.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே,கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு குறித்து தங்களின் ஆலோசனைகள், ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் 45 நாட்களுக்குள் அதாவது வரும் நவம்பர் 21ம் தேதிக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத்து மூலம் இத்துறைக்கு அனுப்பலாம்.