சென்னை: சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் வெற்றி பெற்றதற்கு, பங்கேற்ற கட்சிகள், இயக்கங்கள், ஆதரவளித்த மக்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் 33 அரசியல் கட்சிகள் 44 இதர இயக்கங்கள் உள்ளிட்ட எண்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்றுள்ளன.
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு இயக்கங்கள் ஆர்எஸ்எஸூக்கு எதிராக ஒன்று குவிந்தன என்பது புதிய வரலாறு. தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் பார்வையும் மதவெறி அரசியலுக்கு எதிரான போக்கும் கொண்ட ஒரு மாநிலமாகவுள்ளது என்பதை இந்த அறப்போரில் நிகழ்ந்த அணிதிரட்சி ஒரு சான்றாகவுள்ளது. சனாதன சூழ்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவதாகவே இந்த மனிதச் சங்கிலி அறப்போர் அமைந்தது. சனாதன சங்பரிவார் சதிக்கும்பலிடமிருந்து சமூகப் பிரிவினைவாதிகளிடமிருந்து நம் தமிழ்மண்ணைப் பாதுகாப்போம்.